12,200 வீடுகளில் மின்வெட்டு; லட்சக்கணக்கானோருக்கு இலவச உணவு
சென்னை: கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை, புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் என அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்புகளால் சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
75 ஆயிரம் போலிசார் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ள நிலையில், ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.
தாழ்வான பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. மின் வெட்டு, அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு, வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது எனப் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
தூர்வாரியதால் பாதிப்பு குறைவு
இந்நிலையில் தூர்வாரும் பணிகள் முறையாக நடந்ததால்தான் சென்னை மாநகரம் பெரும் பாதிப்புகளில் இருந்து தப்பியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
சென்னையில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத பெருமழை பெய்துள்ளது என்றும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 800 கிலோ மீட்டர் வடிகால்கள் தூர்வாரப்பட்டதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது.
சென்னையின் தண்ணீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கான தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
12,200 வீடுகளில் மின்வெட்டு
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பல இடங்களில் மழை, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாலும் தரைவழி மின்சார கேபிள்கள் சேதமடைந்துள்ளதாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் உள்ள 12,200 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
396 அம்மா உணவகங்களில் இலவச உணவு
சென்னையில் 200 வார்டுகளில் இயங்கி வரும் 396 அம்மா உணவகங்களிலும், அரசு மருத்துவமனைகளில் ஏழு இடங்களிலும் பொது மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
மூன்று வேளையும் வழங்கப்படும் இலவச உணவால் குடிசை வாழ் மக்கள், கூலித் தொழிலாளர்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.
நிவாரண முகாம்களில் ஆயிரக் கணக்கானோருக்கு உணவு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண முகாம்களில் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு இம்முகாம்களில் இலவச உணவு வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 196,660 பேருக்கு இலவச சிற்றுண்டி, 215,000 பேருக்கு மதிய உணவு, 213,800 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
மோசமான வானிலையால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய நான்கு விமானங்களும் சென்னைக்கு வர வேண்டிய நான்கு விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.