சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை வடகிழக்குப் பருவமழை ஏறக்குறைய ஒரு பெரிய ஏரியாகவே மாற்றிவிட்டது.
மண்ணைப் பார்க்க இயலாத அளவுக்குத் தரை எங்கும் ஏற்கெனவே தண்ணீர் சூழ்ந்துவிட்ட நிலையில் கரும் மேகம், இடைவிடா மழை, பலத்த காற்று, ஏரிகளில் இருந்து மேலும் தண்ணீர் திறப்பு எல்லாம் சேர்ந்ததால் நேற்று சென்னை மக்கள் மேலும் பீதி அடைந்துவிட்டனர்.
பல நாட்களாக மழை பெய்துவந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி நேற்று மாலை கரையைக் கடந்தது.
சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. கடல் அலைகள் சீற்றத்துடன் 3 அடி வரை எழுந்ததாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கியபோது பட்டினப்பாக்கம் கடற்கரையில் காற்றுடன் மணலும் சேர்ந்து கடற்கரையை நோக்கி வீசப்பட்டதால் கடற்கரைப் பகுதிகள் இருள் சூழ்ந்ததுபோல் காணப்பட்டன.
பல இடங்களில் மேலும் மரங்கள் விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெளியே வரவேண்டாம் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். சென்னையை வழக்க நிலைக்குக் கொண்டுவர மாநில நிர்வாகம் பல்வேறு முயற்சிகளையும் நிவாரணப் பணிகளையும் தீவிரப்படுத்தியது.
அதேவேளையில், சென்னையில் மிதமிஞ்சிய மழைக்கு இனி வாய்ப்பு இல்லை என்றும் கனமான, மிகக் கனமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.
நாளை வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

