மதுரை: தொழிற்சாலை விபத்தில் தனது ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர், "எனது கையைத்தான் இழந்தேனேதவிர நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை," என்று கூறுகிறார்.
இவர் மற்றொரு கையின் உதவியைக்கொண்டு மண்பாண்டப் பொருள்களைத் தயாரித்து பணம் ஈட்டி வருகிறார்.
மதுரை மாவட்டம், பரவைப் பகுதியைச் சேர்ந்த ஆர்.வேல் முருகன், 35, "எனது உலகமே இந்த மண்பாண்டக் கலையில்தான் உள்ளது," என்கிறார். இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள கார்த்திகை தீபத்திருநாளுக்காக விளக்குகள், அகல்விளக்குகள், கிளியாஞ்சட்டிகளை உற்பத்தி செய்து வருகிறார்.
இதுகுறித்து வேல்முருகன் கூறுகையில், "10 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாைல விபத்தில் எனது வலது கை துண்டானது. ஆலை நிர்வாகம் சொன்னபடி உதவி செய்யவில்லை. எங்கு ஏறி இறங்கியும் வேலை கிடைக்கவில்லை. இதனால் மண்பாண்டத் தொழிலைத் தொடங்கினேன்.
"சிறுவர்கள் சேமிக்கும் உண்டியல், விளையாட்டுப் பொருட்கள், ஆடி மாத கஞ்சிக் கலயம், பொங்கல் பானை எனப் பருவத்துக்கேற்ப என் உற்பத்தி தொடர்கிறது. இவ்வேலையில் தொடக்கத்தில் சிரமப்பட்டாலும், தற்போது ஓரளவு நல்ல வருமானம் பார்த்து வருகிறேன்," என்கிறார்.

