சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை அண்மையில் வெள்ளத்தில் தத்தளித்தபோது ஏராளமான பாம்புகள் தங்கள் இருப்பிடத்தில் வசிக்க முடியாமல் வெள்ளத்தில் ஆங்காங்கே மிதந்து எங்கு பதுங்குவது என்று தெரியாமல் பாதிப்புக்குள்ளாயின.
அத்தகைய வீடற்ற ஏராளமான பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிய வேதப்பிரியா கணேசன், 22, என்ற பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
சென்னை கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த வேதப்பிரியா பாம்புகளைப் பராமரிக்கும் தொண்டூழியர். இப்போது அவர், தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் படையில் தொண்டூழியராகப் பணியாற்றி வருகிறார்.
சென்னையிலும் புறநகர்ப் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டபோது அவருக்கு 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து அழைப்புகள் வந்தன. அவற்றின் பேரில் செயல்பட்ட வேதப்பிரியா, வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் பல இடங்களுக்கும் சென்று தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்த பாம்புகளைப் பிடித்து பத்திரப்படுத்தினார்.
வேதப்பிரியா பாம்பு பராமரிப்பில் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். பொதுமக்கள் பாம்புகளிடம் சிக்கி செய்வதறியாது உயிரிழக்கக்கூடிய பல சம்பவங்களைத் தான் சந்தித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் 30 சிற்றினங்களைச் சேர்ந்த பாம்புகள் வசிப்பதாகவும் அவற்றில் நான்கு சிற்றினப் பாம்புகள் நச்சுப் பாம்புகள் என்றும் அவர் கூறினார். பாம்புகளைத் தொடாமலேயே அவற்றைப் பிடித்துவிடலாம் என்றும் அதுவே தான் பின்பற்றும் உத்தி என்றும் வேதப்பிரியா கூறுகிறார்.
ஒரு வீட்டில் பாம்பு புகுந்துவிட்டால் எல்லா கதவுகளையும் சன்னல்களையும் திறந்துவிட வேண்டும். பாம்பு பிடிப்பவர் வரும்வரை பாம்புக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்றார் வேதப்பிரியா.