சென்னை: தமிழ்நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட தமிழ் பிராமண இளையர்களுக்குப் பெண் கிடைக்காததால், உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய வடஇந்திய மாநிலங்களில் அவர்களுக்குப் பொருத்தமான பெண் தேட சிறப்பு இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிராமண சங்கத்தின் (தம்பிராஸ்) தலைவர் என். நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாட்டில், பிராமணச் சமூகத்தில் திருமண வயதுப் பிரிவில் உள்ள பத்துப் பையன்களுக்கு, ஆறு பேர் என்ற விகிதத்திலேயே பெண்கள் உள்ளனர்," என்றார் அவர்.
இதனையடுத்து, டெல்லி, லக்னோ, பாட்னா ஆகிய நகரங்களில் இந்தி தெரிந்த ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, பெண் தேடும் படலம் தொடங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்த முயற்சிக்கு வரவேற்பும் இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
தமிழ்நாட்டில் பிராமணச் சமூகத்தில் திருமண வயதுப் பிரிவில் போதுமான பெண்கள் இல்லை என்று கூறப்பட்டாலும், பெண் கிடைக்காததற்கு அது மட்டுமே காரணம் இல்லை என்கிறார் கல்வியியல் வல்லுநர் எம். பரமேஸ்வரன்.
"தங்கள் மகன்களுக்குப் பெண் தேடுவோர் பெரிய மண்டபத்தில் ஆடம்பரமாகத் திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். எளிமையாக மணமுடிக்கவிடாமல் அவர்களை எது தடுக்கிறது? கோவிலிலேயோ வீட்டிலேயோ திருமணத்தை நடத்தலாமே?" என்பது திரு பரமேஸ்வரனின் கேள்வி.
பெண் வீட்டாரே திருமணச் செலவுகள் முழுவதையும் ஏற்க வேண்டியிருக்கிறது எனக் கூறும் அவர், பெரும்பாலான சமூகங்களில் இது ஒரு சாபக்கேடு என்றும் குறிப்பிட்டார்.
"ஆடம்பரமான திருமணங்கள் சமூகத்தில் தகுதிநிலையின் அடையாளமாகிவிட்டது துரதிர்ஷ்டவசமானது. பிராமணச் சமூகம் பிற்போக்குத்தனத்தைக் கைவிட்டு, முற்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார் திரு பரமேஸ்வரன்.
பெண் தேடிக்கொண்டிருக்கும் பிராமண இளையர் ஒருவர் கூறுகையில், "இப்போதெல்லாம் தமிழ்-தெலுங்கு பிராமணக் குடும்பங்களுக்கு இடையே திருமண உறவுகளைப் பார்க்க முடிகிறது. பல பத்தாண்டுகளுக்குமுன் இதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது," என்றார்.
அதேபோல, "முன்பெல்லாம் ஐயங்கார் சமூகத்தில் தென்கலை, வடகலை பிரிவினர்க்கு இடையில் திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இப்போது அது நடக்கிறது," என்று வைணவ பிராமணர் ஒருவர் கூறினார்.

