சென்னை: கொவிட்-19 கிருமித் தொற்று மக்கள் மத்தியில் பரவாமல் தடுக்க, தமிழகத்தில் 50,000 இடங்களில் ேநற்று 9ஆம் கட்டத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்தது.
மாநிலம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இம்முகாமுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தமிழகத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள எட்டு முகாம்களில் 73% பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 35% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
இம்மாதக் கடைசிக்குள் 100% மக்களுக்கும் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுவிட்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழும் வகையில் தடுப்பூசி போடும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது.
இரு கட்டத் தடுப்பூசியையும் விரைந்து போட்டுக்கொள்வதற்கு ஏதுவாக இனி வாரந்தோறும் வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் 'மெகா' தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, "பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே வாரத்தில் இரு நாட்கள் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
"இனியும் பொதுமக்கள் தயங்காமல் உடனடியாக வந்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்," என சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா கிருமித்தொற்றால் புதிதாக 782 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை இத்தொற்றால் மொத்தம் 27 லட்சத்து 17 ஆயிரத்து 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சென்னையில் மட்டும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்து 71 ஆயிரத்து 668.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,211. கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து 907 பேர் வீடு திரும்பினர். கிருமித்தொற்றினால் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு 36,324 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8,581 பேர் உயிரிழந்துள்ளனர்," என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

