திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி சிகர உச்சியில் இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது.
ஆனால் கிருமிப் பரவல் காரணமாக மலை ஏறவும் கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த ஆண்டைப் போன்றே இவ்வாண்டும் கிருமித்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை ஆறு மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நான்கு மணிக்கு சாமி சன்னிதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும்.
மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னிதி முன்பாக எழுந்தருளவிருக்கின்றனர். இதன் பிறகு ஆறு மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னிதியில் இருந்து ஆடியபடியே கொடி மரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை ஆறு மணியளவில் சாமி சன்னிதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி உச்சிக்குச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மகா தீபத்தன்று வரும் பெளர்ணமியன்றும் திருவண்ணா மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கார்த்திகை மாத பௌர்ணமி நேற்று வியாழக்கிழமை மதியம் 1.03 மணிக்கு தொடங்கி இன்று மதியம் 2.51 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் வரும் 20ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.