தமிழகத்தின் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் கனமழையின் காரணமாக 50 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று காலை நிகழ்ந்தது.
தரைமட்டமான அந்த வீட்டில் 18 பேர் தங்கியிருததாக தகவல் வெளியானதை அடுத்து காவல், தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பேரணாம்பட்டுக்கு சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.