விழுப்புரம்: கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1,642 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தை அடுத்த கொளத்தூர் பகுதியில் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்கியவர், "கன மழை தொடர்வதால் மக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம், பாதுகாப்பாக இருங்கள். இம்மாவட்டத்தில் கனமழையால் 1,642 வீடுகள் சேதம் அடைந்ததில் 1,132 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 37 கால்நடைகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.30,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது," என்றார்.
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த கர்ப்பிணிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். ஸ்கேன் எடுக்கும் இயந்திரம், ரத்த வங்கி ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் சேதமாகின.

