கல்லூரி பேராசிரியர் பணி இடைநீக்கம்
கோவை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பில், கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரகுநாதன், 42, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், மாணவிகளுக்கு இரவு நேரங்களில் கைபேசியில் ஆபாச தகவல் அனுப்புவது, குறுந்தகவல் அனுப்புவது, தனிமையில் தன்னைச் சந்திக்கச் சொல்வது, தனது காரில் பயணம் வரும்படி அழைப்பது போன்ற பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளார். விசாரணையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை தந்தது உறுதியானதால், பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சிக்கு விருது
புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு இரு தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு மாநிலத் தலைநகரங்களின் சிறந்த முன்னோடி முயற்சிக்காக விருது வழங்கப்பட்டது. அதேபோல் தென் இந்தியாவின் சிறந்த தனித்திறன் செயல்பாட்டு நகரம் என்ற விருது மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது.
சென்னை வந்த தலைமை நீதிபதி
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள முனீஷ்வர் நாத் பண்டாரி நேற்று சென்னை வந்துசேர்ந்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று அவர் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மேகாலயா நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைநகர் சென்னையில் புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கிறார்.
தூண்டிலில் மீன்பிடிக்கும் திருவிழா
கொட்டாம்பட்டி: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கோவில் ஊருணியில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் வினோத விழா கொண்டாடப்பட்டது. கார்த்திகை மாத தீபத் திருநாளைத் ெதாடர்ந்து, தூண்டில் மூலமாக யார் வேண்டுமானாலும் மீன்களைப் பிடித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் தூண்டில் போட்டு மீன் பிடித்தனர்.

