சென்னை: தமிழகத்தில் ஞாயிறன்று 50,000 இடங்களில் நடைபெற்ற 10வது மெகா தடுப்பூசி முகாமில் ஒரேநாளில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. சென்னையில் மட்டும் இந்த முகாமுக்கு வருகையளித்த ஒன்றேகால் லட்சம் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் வியாழன், ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த முகாமில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 71 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில், 6 லட்சத்து 72 ஆயிரத்து 580 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 11 லட்சத்து 48 ஆயிரத்து 425 பேர் 2வது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

