இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கொவிட்-19 கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
“சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் பலர் கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் நாடு திரும்பினர். இந்நிலையில், நேரடி விமான சேவைகள் இல்லாததால் அவர்கள் மீண்டும் அந்நாடுகளுக்குத் திரும்புவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
“அதேபோல, அந்நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் புலம்பெயர் தமிழர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
“நேரடி விமான சேவையில்லாத காரணத்தால் துபாய், தோஹா, கொழும்பு வழியாக மாற்றுப் பாதையில் அவர்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளும் அவர்கள், அதிக விமானக் கட்டணங்களையும் செலுத்த வேண்டியுள்ளது.
“அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைத் தீர்ப்பதற்குத் தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் தற்காலிக கொவிட்-19 ‘விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்’ உடன்பாட்டைச் செய்துகொள்ள வேண்டும்,” என்று திரு ஸ்டாலின் தமது கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.