சென்னை: தமிழகத்தில் உள்ள நகா்ப்புறங்களிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் தக்காளி உள்ளிட்ட 16 வகை காய்கறிகளை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால் தக்காளி உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால், ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு ஆளாகினா்.
இந்நிலையில், மக்களின் விலைவாசி சுமையைக் குறைக்க நியாய விலைக் கடைகளில் 16 வகை காய்கறிகள் விற்கப்பட உள்ளன.
அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், வெளிச்சந்தையில் ஆப்பிள் விலைக்கு நிகராக ரூ.160 வரை விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளியின் விலை இப்போது ரூ.80 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தாலும், மேலும் விலை குறையவேண்டும் என்பதே பொதுமக்கள், உணவக உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதர காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், நகரும் பண்ணைப் பசுமைக் காய்கறிகள் கடைகள் மூலமும் ஒரு கிலோ தக்காளி ரூ.79க்கு விற்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறைந்த விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தினமும் 15 மெட்ரிக் டன் தக்காளி, இதர காய்கறிகளைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகின்றன," என்றார்.
இந்நிலையில், "கோயம்பேடு சந்தையில் உள்ள தக்காளி மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.50க்குள் மக்களுக்கு விற்பனை செய்யத் தயாராக உள்ளோம். தக்காளி வரத்து குறைந்ததால்தான் தக்காளி விலை ஏற்றத்தில் உள்ளது," என சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒரு வழக்கு விசாரணையில் தந்தை பெரியார் தக்காளி மொத்த வியா பாரிகள் சங்கம் கூறியுள்ளது.
கோவையில் பொதுமக்கள் அனைவருக்கும் தக்காளி ஒரே சீராக கிடைக்கும் வகையில், வாடிக்கையாளர் ஒருவருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யவேண்டும் எனவும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அதிக அளவில் தக்காளி வழங்கவேண்டும் என வியாபாரிகளுக்கு வேளாண் வணிக அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

