தமிழ்நாடு: டிசம்பர் முதல் வாரம் வரை மழை என கணிப்பு; 7 பேர் பலி; வழமைநிலை பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து அதிகமாக பெய்து வருகிறது.
ஏற்கெனவே ஏறத்தாழ மாநிலம் முழுவதும் இடைவிடா மழையால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் வியாழன் முதல் மீண்டும் கனமழை தொடங்கியது. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் வாரம் வரை கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்து இருக்கிறது.
இவ்வேளையில், 12 மாவட்டங்களில் அரசு முகாம்களில் 10,503 பேர் தங்கியிருப்பதாகவும் சென்னை புறநகரில் தற்காலிக முகாம்களில் 620 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இப்போதைய மழை காரணமாக அரியலூர், திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் ஏழு பேர் மாண்டுவிட்டனர்.
மாநிலத்தில் 152 கால்நடைகள் மரணமடைந்துவிட்டன. மொத்தம் 681 குடிசைகளும் 120 கான்கிரீட் வீடுகளும் இடிந்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் நவம்பர் 26 வரை வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட 70% அதிகமாக பெய்து இருக்கிறது. 37 மாவட்டங்களில் சராசரி மழை அளவு அதிகமாக உள்ளது.
கடந்த இரு நாட்களில் தூத்துக்குடி, நாகப்பட்டினம், விருது நகரில் ஆக அதிக மழை பெய்துள்ளது. பல நீர்த்தேக்கங்கள் நிரம்பிவிட்டன. மாநிலத்தில் உள்ள 14,138 ஏரிகளில் 7,123 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டன. தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
தூத்துக்குடியில் 10,000 வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
பல மாவட்டங்களுக்கும் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 25 மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
தலைநகர் உள்ளிட்ட பல பகுதி களிலும் தண்ணீர் தேங்குவதால் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடைமழை தொடர் மழையாக நீடிக்கிறது.

