சென்னை: தமிழகத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிரகொவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் பலனாக மக்களின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் கணிசமாக கூடி இருப்பதாக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாநிலத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய் எதிர்ப்பு ஆற்றல் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் அந்த விகிதாச்சாரம் 60 விழுக்காட்டை கடந்து இருக்கிறது.
ஆகையால், இதுவரை வாரம் இரண்டு நாட்கள் நடந்துவந்த தடுப்பூசி முகாம் இனிமேல் வாரம் ஒரு முறையாக மாற்றப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை 77.02 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 41.60 விழுக்காட்டினர் இரண்டாவது ஊசியையும் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
என்றாலும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் தடுப்பூசி இயக்கத்துக்கு மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் செவிசாய்க்கவில்லை என்பதால் இனி அந்த மாநிலங்களில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் கொவிட்-19 அன்றாடத் தொற்று ஏறத்தாழ 700 ஆகக் குறைந்து இருக்கிறது. மரண எண்ணிக்கை 20க்கும்கீழ் குறைந்துள்ளது.
இவ்வேளையில், மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. டெங்கி காய்ச்சலும் மிரட்டுவதால் அரசாங்கம் இவற்றிலும் கவனம் செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மாநிலத்தில் 4,527 பேருக்கு டெங்கி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாகவும் இப்போது 573 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.