ரயில் மோதி மூன்று யானைகள் பலி
வனத்துறையினர் யானைக் குட்டியின் உடலை மீட்கின்றனர். படம்: தினமணி ஊடகம்
கோவை: கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த விரைவு ரயில் மோதியதில் இரு குட்டி யானைகள் உட்பட மூன்று யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மங்களூர்-சென்னை விரைவு ரயில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தபோது, வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி ரயில் பாதையை கடக்க முயன்ற ஏறக்குறைய 25 வயதுடைய பெண் யானையும் அதன் இரண்டு குட்டி யானைகளும் ரயில் மோதி உயிரிழந்தன.
எம்ஜிஆருக்கு சிறுநீரகம் தந்து
வாழவைத்த லீலாவதி காலமானார்
சென்னை: எம்ஜிஆருக்கு சிறுநீரகம் தானம் செய்தவரும் எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகளுமான லீலாவதி, 72, சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். இவரின் மறைவுக்கு அதிமுக தலைவர்களும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, சித்தப்பாவுக்காக தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து எம்ஜிஆரின் மறுவாழ்வுக்குக் காரணமாக இருந்தவர் லீலாவதி.
மாடுகள் சாலையில் திரிந்தால்
ரூ.10,000 அபராதம்
திருச்சி: ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர் அவற்றை வீட்டிலேயே கட்டி ைவத்து பராமரிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் தெருக்களிலோ, சாலைகளிலோ கால்நடைகளைச் சுற்றித் திரியவிட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் எச்சரித்துள்ளார்.
ரூ.1 கோடி முந்திரியை கடத்திய முன்னாள் அமைச்சர் மகன் கைது
நாமக்கல்: கன்னியாகுமரியில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 12 டன் எடை கொண்ட முந்திரியை தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே சந்தேக நபர்கள் கத்தியைக் காட்டி லாரியுடன் கடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் செபாஸ்டின் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.