வேதா இல்லத்தின் சாவி கேட்டு தீபா, தீபக் ஆட்சியரிடம் மனு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வேதா இல்லத்தின் சாவியை மூன்று வாரங்களுக்குள் தங்களிடம் வழங்கவேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபாவும் ஜெ.தீபக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு நகலை இணைத்துச் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணியிடம் மனு அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு கையகப்படுத்தியது செல்லாது எனத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், சட்டப்படிவாரிசுகளான தீபா, தீபக் ஆகியோரிடம் இல்லத்தை மூன்று வாரங்களுக்குள் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
17 இடங்களில் காற்றுத் தர அளவீட்டு நிலையங்கள்
சென்னை: மாநிலம் முழுவதும் 17 இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரத்தை அளவீடு செய்யும் நிலையங்களை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் காற்று மாசுபாடு குறித்த முழுத் தகவல்களையும் உடனடியாகத் தெரிந்துகொள்ளமுடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானநிலையத்தில் தீவிர சோதனை
சென்னை: தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடு களில் பி.1.1.529 என்ற புதிய வகை ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உலக அளவில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இதுவரை 55,090 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மூவருக்கு தொற்று இருப்பது உறுதியானதாகத் தகவல்கள் கூறியுள்ளன.
இலங்கையில் சிறை வைக்கப்பட்ட 23 மீனவர்கள் விடுவிப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான மீனவர்கள் சென்னை விமானநிலையம் வந்துசேர்ந்தனர். படம்: ஊடகம்
சென்னை: இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, 45 நாட்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களில் 18 மீனவர்கள் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மற்ற ஐந்து மீனவர்களும் கொரோனா சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்ப உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.
''இலங்கையிலிருந்து எங்களை மீட்டெடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உளம்கனிந்த நன்றி,'' என்று மீனவர் கள் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினர்.