உத்திரமேரூர்: மாநிலம் முழுவதும் கனமழை, வெள்ள பாதிப்பால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தங்களது குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்றவேண்டும், இடிந்து விழுந்த வீடுகளைப் பார்வையிட்டு உடனடியாக அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆங்காங்கே மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்திரமேரூர் அருகே வெவ்வேறு கிராமங்களில் கனமழையால் இரு வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளைப் பார்த்து ஆறுதல் சொல்ல அதிகாரிகள் யாரும் வராததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலவாக்கம்-திருமுக்கூடல் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலவாக்கம் போலிசாரும் வருவாய்த்துறையினரும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்குளம், ராமாபுரம் கிராமங்களில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களது வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக் கோரி ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆவடியை அடுத்த சோராஞ்சேரியில் உள்ள ஈசா ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயைத் தனியார் பள்ளி, செங்கல் சூளை, தனியார் வீட்டு மனைப்பிரிவு ஆகியவை ஆக்கிரமித்துள்ளன.
இந்நிலையில், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் பருத்திப்பட்டு-அணைக்கட்டுச்சேரி சாலைப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பட்டாபிராம் போலிஸ் உதவி ஆணையர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர்.