திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான 'ஆர்டி-பிசிஆர்' பரிசோதனை மேற்கொள்ளப்படும் என திருச்சி விமான நிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜ் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ள அவர்கள் நான்கு முதல் ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
'ஓமிக்ரான்' பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயமுள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள இந்திய அரசு, அதில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் அவர்கள் தரையிறங்கும் விமான நிலையங்களிலேயே கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்திய அரசு வெளியிட்ட பட்டியலில் சிங்கப்பூரும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், திருச்சி சென்றடையும் சிங்கப்பூர் பயணிகள், அங்கு கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிய நான்கைந்து மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டியிருக்கும் எனத் தெரியவந்துள்ளது.
"தொற்று அபாயமுள்ள நாடுகளில், சிங்கப்பூரில் இருந்து மட்டுமே திருச்சிக்கு விமானப் பயணிகள் வருகின்றனர். எனவே அப்பயணிகள் அனைவரும் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி கட்டாய கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
"பயணிகளிடம் இருந்து பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகு, அவர்கள் நான்கைந்து மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்காக விமான நிலையத்திலேயே பாதுகாக்கப்பட்ட பகுதி ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது," என்று விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஓமிக்ரான் கிருமி கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவை எதுவும் இல்லை என்றாலும், துபாயில் இருந்து வரும் விமானங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.