புதுக்கோட்டை: தந்தை உயிரிழந்த தகவல் கேட்டு மனமுடைந்த மகன் ஒருவர், இறுதிச் சடங்கில் பங்கேற்று, அவரது முகத்தை கடைசி முறையாகப் பார்த்துவிடவேண்டும் என்பதற்காக பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு ரூ.5 லட்சம் வாடகை கொடுத்து, ஹெலிகாப்டரில் பறந்து வந்து பார்த்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் சுப்பையா, 68. இவரது மகன் சசிகுமார், 49.
திருப்பூரில் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர், இந்த நிறுவனத்தின் வேலை நிமித்தமாக இந்தோனீசியா சென்றிருந்தார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி இவரது தந்தை சுப்பையா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக சசிகுமாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இந்தோனீசியாவில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு விரைந்த சசிகுமார், அங்கிருந்து பெங்களூருக்கு நேற்றுமுன்தினம் வந்து சேர்ந்தார்.
அங்கிருந்து தென்னங்குடிக்கு சாலைமார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்பதால், பெங்களூரிலிருந்து ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்தி தனியார் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார்.
அதன்பின்னர் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கார்மூலம் சொந்த ஊரான தென்னங்குடிக்குச் சென்றார்.
அங்கு தந்தையின் இறுதிச் சடங்கில் சசிகுமார் கலந்துகொண்டார். இதையடுத்து, ஹெலிகாப்டர் பெங்களூருக்குப் புறப்படுவதற்குத் தயாரான நிலையில் வானிலை காரணமாக ஹெலிகாப்டர் புறப்படுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, ஹெலிகாப்டரின் விமானியும் உதவியாளரும் புதுக்கோட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில், வானிலை சரியானதும் நேற்று (2ஆம் தேதி) காலை ஹெலிகாப்டர் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றது.
படங்கள்: ஊடகம்