ராமநாதபுரம்: வைகை அணை யில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் ராமநாதபுரம் அருகே 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து வினாடிக்கு 12,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய், 100 சிறு, குறு கண்மாய்களில் தேக்கப்படுகிறது.
இந்நிலையில், வைகை ஆற்றில் திறக்கப்பட்ட வெள்ளம் ராமநாதபுரம் காருகுடி மதகணை பகுதியை நேற்று முன்தினம் வந்தடைந்தது. அப்போது கரையில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் ராமநாதபுரம் அருகே உள்ள மென்னந்தி, ஆர்.காவனூர், புல்லங்குடி, முதலூர் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. ஆர்.காவனூர் துணை மின்நிலையத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த இரு நாட்களாக மின்சாரம் தடைபட்டுள்ளது.
வெள்ளநீர் புகுந்ததால் 600 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் நாசமாயின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைநீர் தொடர்ந்து வயலில் தேங்கியதால் 50,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி வீணாகியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

