கள்ளக்குறிச்சி: இரு வழித்தடங்களில் பேருந்து சேவையைத் தொடங்கிவைத்து, அந்தப் பேருந்தை சற்று தொலைவு வரை ஓட்டி அங்கு கூடியிருந்த மக்களையும் தொண்டர்களையும் வியக்க வைத்தார் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான எ.வ.வேலு.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை வழித்தடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து சேவை இல்லாமல் மக்கள் பரிதவித்து வந்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து மணலூர்பேட்டை வழியாக திருச்சிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் இரு வழித்தடங்களில் பேருந்துகளைத் துவக்கவேண்டும் என்பது மணலூர்பேட்டை மக்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்துவந்தது.
இந்நிலையில், இரு புதிய வழித்தடங்களில் பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு, பேருந்தில் ஏறி சிறிது தூரத்திற்கு அதை ஓட்டியும் பார்த்தார். இதைக் கண்டு அங்கிருந்த மக்கள் உற்சாகம் அடைந்தனர்.
"கிராமங்களை எல்லாம் நகரங்களாக மாற்றவேண்டும் என்பதே தமிழக முதல்வரின் கனவு," எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
முதலில் அதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய எ.வ.வேலு, பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
"எல்லாரும் ஏவினால்தான் வேலை பார்ப்பார்கள். ஆனால், யாரும் ஏவாமலேயே எனக்காக வேலை பார்ப்பதால்தான் எ.வ.வேலு என்ற பொருத்தமான பெயருடன் இருக்கிறார்," என்று கருணாநிதியால் பாராட்டப்பட்டவர் ஆவார்.

