தஞ்சாவூர்: தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி கழிவறையில் பெண் சிசுவின் சடலம் ஒன்று இரு நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில், அந்தக் குழந்தையைப் பெற்று, கொன்றுபோட்ட தாயைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மேற்கத்திய கழிவறையில் இம்மாதம் 4ஆம் தேதியன்று சரியாக தண்ணீர் வரவில்லை.
இதையடுத்து சுத்தம் செய்யச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் தண்ணீர் வராததால் கழிவறைத் தொட்டியுடன் இணைப்பில் உள்ள தண்ணீர்த் தொட்டியைத் திறந்து பார்த்தனர். அதில், பிறந்து சில மணி நேரமே ஆன சிசு தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல் நிலையத்தினர் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, வல்லம் அருகே உள்ள ஆலக்குடியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் பிரியதர்ஷினியை, 23, நேற்று காலை கைது செய்தனர்.
விசாரணையில், திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது ஒருவரை காதலித்து கர்ப்பமாகி உள்ளார். காதலன் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதால், வேறு யாருக்கும் தெரியாமல் கழிவறைக்குச் சென்று தானே பிரசவித்து, அக்குழந்தையைக் கழிவறைத் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.