நுங்கம்பாக்கம்: வெளிநாட்டு சொகுசு கப்பலில் படிப்புக்கேற்ற, தகுதிக்கேற்ற வேலை வாங்கித் தருவதாகக் கூறி 43 பேரிடம் பல லட்சங்களில் மோசடி செய்த ஒரு பெண் உள்பட இருவரை ஆயிரம் விளக்கு காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவரான வினோத், 35, ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிநாட்டு சொகுசு கப்பலில் தகுதிக்கேற்ப வேலை வாங்கித் தரப்படும் என்ற விளம்பரம் பார்த்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த 'குட்லீப் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வுக்காகச் சென்றுள்ளார்.
வினோத்திடம் அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜாவும் அவரது உதவியாளர் திவ்யபாரதியும் நேர்காணல் நடத்திவிட்டு, கப்பலில் பணிபுரிவதற்கு ரூ. ஒரு லட்சம் பணத்தை நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி கூறியுள்ளனர்.
வினோத்தும் அவர்கள் சொன்னது போலவே கடந்த ஜனவரி மாதம் நிறுவனத்தின் கணக்கில் ஒரு லட்சம் செலுத்தி உள்ளார்.
ஆனால், இதுவரை வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை.
இதனால், சந்தேகமடைந்த வினோத், இதுகுறித்து ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, குற்றம் சாட்டப் பட்ட இருவரையும் காவல்துறை அதிகாரிகள் நீண்ட நாளாகத் தேடி வந்த நிலையில், பூந்தமல்லியில் இருந்த ராஜா, 35, திவ்யபாரதி, 27, ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் சொகுசு கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 43 பேரிடம் ரூ.48 லட்சத்து 80,000 பணத்தை மோசடி செய்தது தெரியவந்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். விசாரணை தொடர்கிறது.

