தமிழகத்தின் குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த பெண் ஒருவரைப் பேருந்தில் இருந்து அதன் நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது தம்மை அதிர்ச்சி அடைய வைத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது கண்டிக்கத்தக்க செயல் என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குளச்சல் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்மணி மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு வீடு திரும்ப அரசுப் பேருந்தில் அவர் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாகக் கூறிய ஓட்டுநர், அவர் பேருந்தில் பயணம் செய்ய இயலாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த அந்தப் பெண்மணி, பேருந்து நிலையத்தில் இருந்தவர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். அவர் உரக்கக் கூச்சலிட்டும் எந்தப் பயனும் இல்லை.
பேருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் கண்கலங்கி நின்ற அவர், பின்னர் தம்மை அமைதிப்படுத்திக்கொண்டு தன் சொந்த ஊருக்கு நடந்தே சென்றார்.
இந்த விவகாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கடும் அதிர்ச்சி அடைந்த அவர், தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
"மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் வேளையில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. 'எல்லோரும் சமம்' என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்," என்று முதல்வர் ஸ்டாலின் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக, பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துநர் மணிகண்டன், நேரக் காப்பாளர் ஜெயக்குமார் ஆகிய மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

