தொற்று அபாயமுள்ள நாடுகளில் இருந்து வந்த 7,473 பேரில் 9 பேருக்கு பாதிப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனைக் கட்டணம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
அங்கு துரித பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.3,400யும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.700யும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணத்தை குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், துரித பரிசோதனைக் கட்டணம் ரூ3,400லிருந்து ரூ.2,900ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு 700 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், ரூ.100 குறைத்து ரூ.600 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள நான்கு அனைத்துலக விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓமிக்ரான் கிருமிப் பரவலைத் தடுக்க தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களில் தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், போஸ்ட்வானா, கானா, தான்சானியா, சிங்கப்பூர், ஹாங்காங், நியூசிலாந்து உட்பட தொற்று அபாயம் உள்ள 11 நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 விழுக்காட்டினருக்கும் கொவிட்-19 பரிசோதனை செய்யப்படுகிறது.
டிசம்பர் முதலாம் தேதியில் இருந்து 7ஆம் தேதி வரை ஓமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்த 7,473 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அவர்களில் ஒன்பது பேருக்கு மட்டுமே கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது. அவர்களது மாதிரிகள் அடுத்த கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 'டெல்டா பிளஸ்' வகை பாதிப்பு இருப்பது உறுதியானது.
பிற நாடுகளில் இருந்து வந்த 26,527 பயணிகளில் 2 விழுக்காடு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பயணிகளுக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓமிக்ரான் பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 700க்கும் அதிகமானோருக்கு கிருமி தொற்றியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பத்து பேர் பலியாகிவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 36,549 ஆக கூடியுள்ளது.
இதேவேளையில், 29 மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.