நீலகிரி: குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 ராணுவ வீரர்கள் கடந்த 8ஆம் தேதி உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன.
இம்மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ள எஸ்.பி. அம்ரித்தின் உத்தரவுப்படி குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 10,000க்கும் மேலான கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டன.
மருந்தகங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் வழக்கம்போல இயங்கின.
இதேபோல சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ராணுவ அதிகாரிகளின் உயிரிழப்புக்கு துக்கத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரி, மளிகை, காய்கறிக் கடைகள் உட்பட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டதாக வர்த்தக, உணவக சங்கங்களின் தலைவருமான முகமது ஜாபர் தெரிவித்தார்.
இதற்கிடையே, விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி வருண் சிங், பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்னும் ஆபத்தான கட்டத்திலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் உள்ளதால் அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

