ராமநாதபுரம்: வீட்டிலிருந்த தாய், மகளை இரவு நேரத்தில் எரித்துக் கொன்ற வழக்கின் தொடர்பில், இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த இருவரை நேற்று கைது செய்த காவல்துறை அதிகாரிகள், மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ரயில்வே குடியிருப்பில் வசித்தவர் காளியம்மாள், 58.
இவர், மண்டபம் ரயில்வே மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். கணவர் இறந்துபோன நிலையில், தனது இளைய மகள் மணிமேகலையுடன், 33, காளியம்மாள் வசித்து வந்தார்.
இந்நிலையில், மதுரையில் வசிக்கும் மூத்த மகள் சண்முகப்பிரியாவை ஊருக்கு வருமாறு கடந்த திங்களன்று கைபேசியில் காளியம்மாள் அழைத்துள்ளார்.
கடந்த செவ்வாயன்று காலை மண்டபத்துக்கு வந்த சண்முகப்பிரியா, வீட்டில் வெள்ளையம்மாளும் மணிமேகலையும் எரித்துக் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக மண்டபம் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், மண்டபம் இலங் கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த சசிகுமார், 35, ராஜ்குமார், 30, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், கடந்த 6ஆம் தேதியன்று இரவு அந்த வீட்டின் பின்பக்கம் வழியாக புகுந்து தூங்கிக்கொண்டிருந்த காளியம்மாளை யும் அவரது மகளையும் தாக்கிக் கொன்றுள்ளனர். தொடர்ந்து அவர்களது கழுத்து, காதில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டின் பீரோவில் இருந்த பட்டுச்சேலை உள்ளிட்ட துணிகளை தாய்-மகள் உடல்கள் மீது போர்த்தி தீவைத்து எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இக் கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

