சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, அதில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கவேண்டும் என்று ஜெயலலிதாவின் அண் ணன் மகள் ஜெ. தீபா வலியுறுத்தி உள்ளார்.
"ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மேல் சந்தேகம் உள்ளதால் அவரையும் விசாரிக்க வேண்டும்," எனக் கூறியுள்ள தீபா, விசாரணையை விரைவில் நடத்தி முடிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயியின் உத்தரவின்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தின் சாவியை ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக்கிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து, வேதா இல்லத்திற்கு வருகை தந்த இருவரும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் முன்னிலையில் வீட்டிற்குள் சென்று அனைத்து அறைகளையும் மூன்று மணி நேரமாகப் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து தீபா செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஜெயலலிதா இறந்த அன்று வீட்டிற்குள் என்னால் செல்ல முடியவில்லை. வாசலில்தான் நின்றேன். முன்பைவிடவும் வேதா நிலையம் தற்போது மிகவும் மாறியுள்ளது.
"ஜெயலலிதா பயன்படுத்திய பெரும்பாலான பொருட்களைக் காணவில்லை. அவரது அடையாளங்கள் வீட்டிற்குள் எதுவும் இல்லை. அவர் பயன்படுத்திய கட்டில்கூட தற்போது இல்லை," என்று சொன்னவர், "ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா மேல் நிறைய சந்தேகம் உள்ளது. அவரையும் விசாரிப்பது முக்கியம்," என்றார்.
சசிகலா இந்த வீட்டை உங்களி டமிருந்து வாங்கிவிடுவார் என்ற பேச்சு உள்ளதே என்று செய்தி யாளர்கள் கேட்டபோது, "இது என்ன கத்திரிக்காய் வியாபாரமா? யாருக்கு விற்றாலும் பதிவு செய்ய வேண்டும் அல்லவா, அப்போது எல்லாருக்கும் தெரியவருமே," என்று கேட்டவர், "வேதா இல்லத்தில் குடிபெயர வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. அது நிறைவேறி விட்டது. இந்த இல்லத்துக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கவேண்டும்," என்றார்.
"ஜெயலலிதாவிடம் நெருங்க விடாமல் எங்களைத் தடுத்தவர் சசிகலா. ஆனால், இந்தச் சொத்து தொடர்பாக சசிகலாவிடம் இருந்து எந்தத் தொந்தரவும் வரவில்லை," என்றவர், "அதிமுக சார்பில் வேதா நிலையம் தொடர்பாக மேல்முறையீடு செய்தால் சட்டரீதியாக அதை சந்திக்கவும் தயாராக உள்ளோம்," என்று கூறியுள்ளார்.
என் வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ளோம். என் அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா இப்போதுதான் சாந்தியடையும்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

