சென்னை: ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தொற்று இதுவரை தமிழகத்திற்குள் நுழையவில்லை. ஒருவேளை இனி நுழைந்துவிட்டாலும்கூட அதை எதிர்கொள்ளத் தமிழகம் தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று கூறினார்.
மாநிலம் முழுவதும் கிருமிப் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் கூட, அண்டை மாநிலங்களில் உருமாறிய ஓமிக்ரான் கால் பதித்துள்ளதால் தமிழக மக்களையும் இந்த அச்சம் தொற்றியுள்ளது.
இந்நிலையில், நாளை 15ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ளதை அடுத்து, இதுகுறித்து முதல்வர் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசித்தார்.
"கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் இதற்கு தடை விதிக்கலாமா? அல்லது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா?" என்று கேட்டார்.
இதற்கு விளக்கம் அளித்த ராதாகிருஷ்ணன், "கொரோனா கிருமி தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே தவிர முற்றாக ஒழிந்துவிட்டது என்று கூற முடியாது," என்றவர், "ஓமிக்ரான் தொற்று குறித்து மக்கள் பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. இத்தொற்று பக்கத்து மாநிலங்களில் தொற்றிவிட்டதால் தமிழகத்திற்குள் வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன," என்று சொன்னார்.
"சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
"கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வருவதையொட்டி மக்கள் எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக்கொள்ளும் வகையில் அரசு விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
இதேபோல் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளும் தங்களது கருத்துகளை முதல்வரிடம் எடுத்துக் கூறினர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மக்களுக்கு அரசின் சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
674 பேருக்குப் பாதிப்பு
இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 708 பேர் குணமடைந்த நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளார்.

