தர்மபுரி: மாநிலம் முழுவதும் குட்கா, பாக்கு, மாவா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்றதாக கடந்த ஒரே வாரத்தில் 3,307 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
"பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிகிறது. இதைத் தடுக்கவும் போதைப் பொருளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்பது பொதுமக்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழக காவல் துறையின் சட்டம், ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையைத் தடுக்கும் வகையில் காவல்துறை யினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
"கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா விற்பனை செய்ததாகவும் கடத்திய தாகவும் 324 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து ரூ.51.97 லட்சம் மதிப்புள்ள 520 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
"போதைப் பாக்கு, குட்கா பொருட்கள் கடத்தியதாக 2,983 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து ரூ1.64 கோடி மதிப்புள்ள 15 டன் பாக்கு, குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
"அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 3,818 கிலோ, சேலத்தில் 1,909 கிலோ, தஞ்சாவூரில் 1,790 கிலோ, நாமக்கல்லில் 1,597 கிலோ, ஈரோட்டில் 1,255 கிலோ, திருப்பத்தூரில் 1,045 கிலோ பாக்குகளும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்குப் பயன்படுத்திய 31 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,"
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.