சென்னை: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அவருடைய வாரிசுகளாக தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜெயலலிதா இல்லத்தின் சாவியை அரசாங்க அதி காரியிடமிருந்து பெற்று இருவரும் உள்ளே சென்றனர்.
கடந்த அதிமுக அரசாங்கம், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்து, அதைச் செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றியது.
மேலும் வேதா நிலையமும் அங்குள்ள அசையும் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டன.
இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக், ஜெயலலிதா வீட்டை அரசுடைமை யாக்கியது செல்லாது என்றும் வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கில் தீபா, தீபக்குக்கு சாதமாக தீர்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் வேதா இல்லம் குறித்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் படும் என்று அதிமுக கூறியிருந்தது.
இதன் அடிப்படையில் அதிமுக மற்றும் வேதா நிலைய நினைவில்ல அறக்கட்டளை சார்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தரப்பில் மேல் முறையீடு செய்ய அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

