முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி மீது ஊழல் வழக்குப்பதிவு
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நேற்று முழுவதும் சோதனை நடத்தியது. இந்தச் சோதனை இன்றும் தொடரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
நேற்று நிலவரப்படி கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், சென்னை என 69 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தமிழகத்திலிருந்து வெளியாகும் ஊடங்கள் தெரிவித்தன.
ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகாவிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தியதாகவும் சென்னையில் மட்டும் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை மேற்கொண்ட தாகவும் தினத்தந்தி நாளேடு குறிப்பிட்டது.
மேலும் நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் காலை 6:45 மணி முதல் 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தியது. இதற்கிடையே அங்கு குவிந்த 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர், திமுக மற்றும் காவல் துறையைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதி யில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தியது.
தங்கமணிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் அரசு ஒப்பந்ததாரரான நாமக்கல்லில் இருக்கும் சத்தியமூர்த்தி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக ஊடகங்கள் கூறின.
ஈரோட்டில் பாரி வீதி, பண்ணை நகர், பண்ணை வீதி, கணபதி நகர், முனியப்பன் கோவில் வீதி உள்ளிட்ட ஐந்து இடங்களில் 30க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர் அருகே வேலாயுதம்பாளையம் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான தங்கமணியின் உறவினர் வசந்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையிட்டனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் சோதனை நடைபெற்றபோது தங்கமணி வீட்டின் முன்பு கூடிய அ.தி.மு.க. தொண்டர்கள் பாதுகாப்புக்காக போடப்பட்ட தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரி காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தங்கமணி, அவரது மனைவி, மகன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதில், 2016-2020 அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முறைகேடாக சேர்த்த சொத்துகளை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக முதல்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

