சென்னை: பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 16, 17 ஆகிய இரு தேதிகளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான வங்கிக் கிளைகளும் மூடப்பட்டதால் ஏறக்குறைய ஐந்தரை லட்சம் காசோலைகள் தேக்கம் அடைந்தன. அத்துடன், கடந்த 16ஆம் தேதி மட்டும் ரூ.5,400 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மாநிலத்தில் ஏறத்தாழ 80,000 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6,500 பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலான வங்கிகள் செயல்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணத்தைச் செலுத்த முடியாமலும் காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் தவித்தனர்.