சென்னை: மாநகரப் பேருந்து ஊழியரை பள்ளி மாணவர்கள் தாக்கியதை அடுத்து சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நிலைகுத்தியது.
சென்னையில் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்துப் படிகளில் தொங்கியபடி செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது ஒருவித சாகசம் என்ற தவறான புரிதல் அவர்களிடம் உள்ளது.
நேற்று முன்தினம் அண்ணா சதுக்கம் பகுதியில் இருந்து பெரம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தில் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பலர் ஏறியுள்ளனர். அவர்களில் பத்து பேர் பேருந்து படிகளில் தொங்கியவாறு, ஆபத்தான முறையில் பயணம் செய்ததைக் கண்ட ஓட்டுநர், அனைவரையும் பேருந்துக்குள் வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் அதைக் கண்டுகொள்ளாத மாணவர்்கள் பாடல்களைப் பாடி ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பெண் பயணி ஒருவர் அவர்களைத் தட்டிக்கேட்க, பதிலுக்கு அவரை தகாத வார்த்தைகளைக் கொண்டு ஏசிய மாணவர்கள், பின்னர் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் அந்தப் பெண்மணி காயமடைந்து பேருந்திலேயே மயக்கமடைந்தார். பதறிப்போன ஓட்டுநரும் நடந்துநரும் மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களில் சிலர் திடீரென கற்களைக் கொண்டு நடத்துநரைத் தாக்கினர். பின்னர் அனைவரும் தப்பியோடினர்.
இந்நிலையில் காயமடைந்த நடத்துநரும் ஓட்டுநரும் பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயணிகளில் சிலரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைக்கண்டு அவ்வழியே சென்ற எழுபதுக்கும் மேற்பட்ட பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களும் சில இடங்களில் இதர போக்குவரத்து ஊழியர்களும் மாணவர்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு மாநகரப் பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் போக்குவரத்து நிலைகுத்தியது. விரைந்து வந்த காவல்துறை உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

