ராமேசுவரம்: பிச்சை எடுத்த பணத்தைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன், மனைவி கொல்லப்பட்ட சம்பவம் ராமேசுவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தைச் சேர்ந்த 50 வயதான வேல்முருகனும் 42 வயதான அவரது மனைவி ராமுவும் கடந்த பல ஆண்டுகளாக கோவில்கள் அருகே பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.
ராமேசுவரம் கோவில் ரத வீதியில் இவர்களுடன் மேலும் சிலரும் பிச்சை எடுத்து வந்ததாகத் தெரிகிறது. தங்களுக்குள் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காக பிச்சைக்காரர்கள் அனைவரும் தங்களுக்குள் சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, அதன்படி செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ள திறந்தவெளிக் கூடத்தில் ஓய்வெடுப்பதுதான் இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி நள்ளிரவு வேளையில் வேல்முருகனும் ராமுவும் அந்தக் கூடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு பிச்சைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காவல்துறை விசாரணை நடத்தியதில், பிச்சைக்காரர்களில் ஒருவர்தான் கொலையாளி எனத் தெரியவந்துள்ளது.
பக்தர்களிடம் பிச்சையாக பெற்ற பணத்தை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அடையாளம் தெரியாத ஒரு பிச்சைக்காரர் இருவரையும் கொலை செய்துள்ளார்.

