செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3ff3f997-3843-4db4-9cfb-831e90d7e245
-

சசிகலா மீது காவல்துறையில் புகார்

சென்னை: தம்மை அதிமுக பொதுச்செயலாளர் என்று சசிகலா சொல்வதை ஏற்க இயலாது என்றும் அவர் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது தவறு என்பதால், சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சசிகலாவின் செயல்பாடுகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சார்ஷாவில் இருந்து மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள 1.14 கிலோ தங்கம், ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருள்களை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த நால்வர் கைதாகினர். இதேபோல் மற்றொரு பயணியிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 275 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரும் கைதானார்.

தனியார் தொழிற்சாலை உணவு விவகாரம்: சேலம் வளர்மதி கைது

ஸ்ரீபெரும்புதூர்: தனியார் தொழிற்சாலையில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு பெண் ஊழியர்கள் திடீரென மாயமானதாகவும் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக ஏராளமான ஊழியர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், இது பொய்யான தகவல் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக செயல்பாட்டாளரான சேலம் வளர்மதி கைதாகி உள்ளார். பொய்த் தகவலைப் பரப்பியது வளர்மதிதான் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் வளர்மதி மீது புகார் அளித்ததாகத் தெரிகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்து

சென்னை: நட்சத்திர தங்குவிடுதிகள், பண்ணை வீடுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தி உள்ளது. மேலும், தடையை மீறி அத்தகைய கொண்டாட்டங்கள் எங்காவது நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைத்து அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அதன் மாநிலத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அறிக்கை வழி கேட்டுக் கொண்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும் ராஜேந்திர பாலாஜி

சென்னை: பண மோசடி வழக்கில் தேடப்படும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அவரைத் தேடிப்பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.