விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தன்னைக் கைது செய்வதில் இருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அவர் எங்கு போனார் என்பதைக் கண்டுபிடிக்கும் பணியில் கடந்த மூன்று நாள்களாக காவல்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
'சைபர் கிரைம்' என்ற இணையக் குற்றத் தடுப்பு காவலர்களின் உதவியுடன் ராஜேந்திர பாலாஜியைத் தொடர்பு கொள்பவர்களை ைவத்து அவரைக் கண்டுபிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், ஆதரவாளர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் என 600 பேரின் கைபேசி எண்களை அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியைப் பலரிடம் பெற்று பணியும் வழங்காமல் பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் இரு வழக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில், இவ்விரு வழக்குகளில் இருந்தும் முன்பிணை கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் தலைமறைவானார்.
முன்னதாக ராஜேந்திர பாலாஜியின் அக்கா மகன்கள் வசந்தகுமார், 38, ரமணா, 34, கார் ஓட்டுநர் ராஜ்குமார், 47, ஆகியோரிடம் தனிப்படையினர் 15 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே முன்பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள ராஜேந்திர பாலாஜி இன்று அல்லது நாளைக் குள் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்படலாம் என்றும் ஒரு தகவல் தெரிவித்துள்ளது.