வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் சிங்க முகமூடியைப் போட்டுக்கொண்டு தனி ஒருவராக கொள்ளையடித்த டீக்காராமன் என்ற திருடரை ஐந்து நாள்களுக்குப் பிறகு வேலூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இடுகாட்டில் மூன்று இடங்களில் அவர் புதைத்து வைத்திருந்த எட்டு கோடி மதிப்பிலான 16 கிலோ தங்க, வைர நகைகளும் மீட்கப்பட்டன.
தான் ஒரு கட்டடம் கட்டும் கொத்தனார் என்பதால், கான்கிரீட் சுவரில் கனகச்சிதமாகத் துளையிட்டு களவாடியதாகவும் யூடியூப் காணொளிகளைப் பார்த்து கொள்ளையடிக்க கற்றுக்கொண்டதாகவும் டீக்காராமன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலூர், தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் இம்மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் 16 கிலோ நகைகள் களவு போனது.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூரை அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டீக்காராமன் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து, வேலூர் காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி.பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "எட்டு தனிப்படைகள் அமைத்து, ஆறு நாள்களில் குற்றவாளியைக் கைது செய்து, எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான 16 கிலோ தங்கம், வைர நகைகளை மீட்டுள்ளோம்.
"22 வயதான டீக்காராமன் இக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
"இடுகாட்டில் மறைத்து வைத்திருந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என விசாரணை செய்து வருகிறோம்," என்றார்.
காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா கூறுகையில், "பத்து நாள்களாக ஒவ்வொரு இரவிலும் வந்து பொறுமையாக சுவரைத் துளையிட்டு கொள்ளைச் சம்பவத்தை கொள்ளையன் அரங்கேற்றியுள்ளார். 'சப்தமின்றி துளையிடுவது எப்படி' என்றும் இதற்கு முன்பு அரங்கேறிய பெரும் கொள்ளைச் சம்பவங்களில் நடந்த தவறுகள் இனி நேராமல் இருக்கவும் யூடியூப்பில் உள்ள காணொளிகளைப் பார்த்து ெகாள்ளையடிக்க கற்றுக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
"குற்றவாளி ஒரு சிவன் பக்தன். ஆகவே, கொள்ளையடித்த நகையில் இருந்த ருத்ராட்ச மாலையை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு மற்றவற்றை புதைத்து வைத்திருந்தார். முதலில் கிடைத்த ருத்ராட்ச மாலை மூலம் கொள்ளையனை பிடித்தோம்," என்றார்.

