திண்டுக்கல்: அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில், கடந்த 20 ஆண்டுகாலமாக மின்சார வசதி, குடிநீர் வசதியின்றி வாழ்ந்து வருகிறோம். பள்ளி செல்லும் குழந்தைகள் மின்சாரம் இன்றி படிப்பதற்கு பெரும் அவதிப்படுவதால் மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திண்டுக்கல்லில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கோட்ட நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அரசின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டில் மின்சார வசதி இல்லாததால், பிள்ளைகள் இருளில் கல்வி கற்கும் அவலம் குறித்து முனியப்பன் பலமுறை மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அவர்களது மூன்று குழந்தைகளும் மண்ணெண்ணெய் விளக்கின் மூலம் வீட்டில் பாடம் படித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் இந்திராணி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

