சென்னை: தமிழகத்தில் இன்னும் ஒன்பது மில்லியன் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா கிருமித்தொற்றில் இருந்து தப்பிக்க இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழத்தில் பல்வேறு கட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கானோர் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தில் 8.7 மில்லியன் பேர் இரண்டாவது தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது அண்மையில் தெரிய வந்தது.
இதையடுத்து, வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் ஒன்பது மில்லியன் பேர் இன்னும் முதல் தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

