சென்னை: முன்னணி கைபேசி உதிரிப் பாகத் தயாரிப்பு நிறுவனம் வருமான வரி செலுத்துவதில் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் நாடு முழுவதும் உள்ள சீன கைபேசி நிறுவனங்களிலும் நேற்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
சீன நிறுவனங்கள் தயாரிக்கும் கைபேசிகளின் உதிரிப் பாகங்களை ஏற்றுமதி செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, திரைப்பட நடிகர் விஜய்யின் உறவினரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பிரிட்டோ வீட்டிலும் வருமானவரித்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கை சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வரி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனத்துடன் தொடர்புள்ள மேலும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவற்றுள் பிரிட்டோவின் வீடும் ஒன்று என்றும் தெரிய வந்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தை தயாரித்தவர் பிரிட்டோ.
தனியார் உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் டெல்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. அந்த இடங்களிலும் அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அந்நிறுவனம் பல்வேறு முன்னணி கைபேசி நிறுவனங்களுக்கு உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்கிறது. மேலும், இந்திய சந்தையிலும் அந்த உதிரிப் பாகங்கள் விற்கப்படுகின்றன.
இந்நிறுவனம் வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. இதே போல் சீனாவில் தயாராகும் கைபேசிகளை இறக்குமதி செய்தது, அவற்றுக்கான உதிரிப் பாகங்களை ஏற்றுமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக பிரிட்டோ நடத்தி வரும் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது.
மேலும், சீன கைபேசி நிறுவனங்களிலும் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின்போது நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் என எராளமானோர் பங்கேற்றனர். சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் சோதனை இன்னும் முடியவில்லை என்றும் குறிப்பிட்ட அதிகாரிகள், இன்றும் அந்நடவடிக்கை நீடிக்கும் எனத் தெரிவித்தனர்.

