நரிக்குடி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது நரிக்குடி பூம்பிடாகை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. முப்பதுக்கும் மேலான மாணவர்கள் படித்து வரும் இந்தப் பள்ளிக்கு கடந்த ஐந்து மாதங்களாகவே ஆசிரியர்கள் யாரும் பாடம் போதிக்க வருவதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், மாணவர்கள் தாங்களாகவே சொந்தமாக கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பள்ளித் தலைமை ஆசிரியர் இரு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். உதவி ஆசிரியர் களும் பள்ளிக்கு வருவதில்லை. இதற்காக, மாணவர்கள் தங்க ளது பள்ளிக்கூட வருகையை நிறுத்திவிடவில்லை.
இதையறிந்த கிராமத்து பட்டதாரி இளைஞர்கள் சிலர், அவ்வப்போது வந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தி ஊக்கப்படுத்தி வருகின்றனர். மதிய உணவும் வழங்கப்படுகிறது.
இந்த இளைஞர்களும் வராத நேரங்களில் மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை முடிந்தள வில் கற்றுக்கொள்கின்றனர்.
சில மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஆடு மாடுகளை மேய்த்தும் வீட்டு வேலைகளைச் செய்தும் தங்களது எதிர்காலத்தை பாழாக்கி வருகின்றனர்.
இப்பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இங்குள்ள மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிக்குடி வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில், "சுழற்சி முறையில் நான்கு ஆசிரியர்களை நியமித்தோம். மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதால் போக்குவரத்தை காரணம் காட்டி அவர்களும் பணிக்கு வரவிரும்பவில்லை," என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

