கோவை: கோவை அனைத்துலக விமான நிலைய விரிவாக்க பணிக்காக கடந்த மூன்று மாதங்களில் நில உரிமையாளர்களுக்கு 868 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கோவை அனைத்துலக விமானநிலையத்தை மேம்படுத்தும் பணிகள் கடந்த பத்தாண்டுகளாக மந்த கதியில் நடந்து வந்த நிலையில், விரிவாக்க பணிகளுக்காக நிலங் களைக் கையகப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் துவங்கியது.
விமானநிலையம், 420 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், 9,500 அடி நீள ஓடுதளம் உள்ளது. இதனுடன் கூடுதலாக, 644 ஏக்கர் பரப்பளவை இணைத்து, 12,500 அடி நீள ஓடுதள பாதை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நிலங்கள் சிங்கா
நல்லுார், உப்பிலிபாளையம், காளப்பட்டி, இருகூர், நீலாம்பூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ளன. இதில் 30 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமாகும்.
152 ஏக்கர் இந்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமானது. மீதமுள்ள, 462 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்த வேண்டிய பட்டா நிலமாகும்.
இவற்றில் நில உரிமையாளர்கள் மொத்தம் 3,075 பேர் உள்ளனர். இச்சூழலில் நில இழப்பீட்டுத் தொகையாக, 1,132 கோடி ரூபாயை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு ஒதுக்கியது.
இதையடுத்து நிலம் கையகப்
படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இதுவரை, 1,054 உரிமையாளர்களிடம் இருந்து, 195 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 868 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வருவாய்துறை அதிகாரிகள் கூறியபோது, "நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.
"நிலத்தை உரிமையாளர்கள் கொடுக்க சம்மதித்தவுடன் நில அளவையர்கள் மூலம் அளவீடு செய்து, வருவாய்துறையினர் மூலம் பட்டா, மூலப்பத்திரம், வில்லங்கச் சான்று போன்ற ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். பின், பத்திரப்பதிவு செய்து நிலம் கையகப்
படுத்தப்படும்.
"இதற்கான இழப்பீட்டுத் தொகை உரிமையாளரின் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும். குடியிருப்பு நிலத்துக்கு ஒரு சதுர அடிக்கு 1,500 ரூபாயும், விவசாய நிலத்துக்கு ஒரு சதுர அடிக்கு 900 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்கள்.
மேலும் மாவட்ட ஆட்சியர்
சமீரன் கூறுகையில், "விமான
நிலைய விரிவாக்க பணிக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க,
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்களாக இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முடிந்து, தேவையான நிலம் முழுவதும் கையகப்படுத்தப்படும்,'' என்றார்.
தற்பொழுது செயல்பட்டுவரும் கோவை அனைத்துலக விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

