'நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் தரமான வீடுகள் கட்டித் தரப்படும்'
வேலூர்: வேலூரில் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தரப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கட்டடம் வலுவானதாக இல்லாததால் 40 வீடுகள் வரை சேதமடைந்து உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 17 வரை புத்தக கண்காட்சி
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ள 36வது புத்தகக் கண்காட்சி நேற்று தொடங்கியது. புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜனவரி 17 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. 2022 புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31, ஜனவரி 1ஆம் தேதிகளில் 10% முதல் 50% வரை புத்தாண்டுச் சிறப்புத் தள்ளுபடியாக புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ரூ.425,000 வரி விதிப்பு
மதுரை: மதுரையில் அதிக கட்டணம் வசூலித்து முறையாக வரி செலுத்தாமல் இருந்த சுற்றுலா ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு ரூ.425,000 வரி விதிக்கப்பட்டது. மேலூரில் கடந்த ஒரு வாரமாக பிளானட் எக்ஸ், ஜி.ஆர்.பி. ஹெலிகாப்டர் டூரிஸம் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து மதுரையை ஹெலிகாப்டர் மூலமாக சுற்றிப் பார்ப்பதற்கு அரை மணி நேரத்திற்கு ரூ.5,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

