சென்னை: தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல், 15 வயது முதல் 18 வயதுடைய இளம் பிள்ளைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, மடுவங்கரை பகுதியில் நேற்று 16வது மாபெரும் தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்த பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"மத்திய அரசின் உத்தரவுப்படி வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் கொவிட்-19 தடுப்பூசி போடும் பணி சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் பள்ளியில் தொடங்கப்பட உள்ளது.
"15-18 வயதில் உள்ள ஏறத்தாழ 33 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பு பெறலாம்.
"60 வயதைக் கடந்த 1.04 கோடி பேர் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தகுதி பெற்றுள்ளனர்," என்றார்.
இந்தியாவில் ஓமிக்ரான் கிருமிப்பரவல் இதுவரை 17 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதிக பரவல் உள்ள மாநிலங் களின் வரிசையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நால்வர் கொண்ட மத்தியக்குழுவினர் நேற்று இரவு தமிழகத்துக்கு வருகை தர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
ஏற்கெனவே, ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த 34 பேரில் 12 பேர் குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், மற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இவர்களது மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் சொன்னார்.
இதற்கிடையே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஓமிக்ரான் சிறப்பு வார்டு, உயிர்வாயு உற்பத்தி நிலையம் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
"மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1.50 லட்சம் படுக்கைகள் தயாா் நிலையில் உள்னன. அத்துடன், உயிர்வாயு வசதியைப் பொறுத்தவரை 1,400 டன் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது," என்று சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலுக்கு கொரோனா
"நகைச்சுவை நடிகா் வடிவேலு, இயக்குநா் சுராஜ் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
"ஓமிக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு, பெரிய நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவேண்டும்," என்று ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

