திருவரங்கம்: திருச்சி மாவட்டம், திருவரங்கம் அருகே 'மலை ஒட்டர்கள்' என்ற பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள், இந்த உலகமே நவீனமயமாய் மாறி வரும் சூழலில், தங்களது வாழ்க்கை மட்டும் இன்னும் இருளிலேயே இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.
கடந்த 100 ஆண்டுகளாகவே மின்சார இணைப்பு, குடிநீர், கழிவறை, சாலை உள்ளிட்ட எந்தவோர் அடிப்படை வசதிகளும் இன்றி தவித்து வருவதாக குற்றம்சாட்டி யுள்ள இப்பழங்குடியின மக்கள், "எங்களது கிராமத்தில் இருந்து எங்களை வெளியேற்றவும் முயற்சி எடுத்து வருகின்றனர். இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் மாநில அரசு ஒரு தீர்வு காணவேண்டும்," என வலியுறுத்தி உள்ளனர்.
திருச்சி மாவட்டம், திருவரங்கத்தில் உள்ள அல்லித்துறை என்ற கிரா மத்தில் இந்த 'மலை ஒட்டர்கள்' வசித்து வருகின்றனர்.
இவர்கள், கடந்த 100 ஆண்டு களாக அல்லித்துறை பகுதிகளில் உள்ள வீடுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், தற்போது வீடுகள் தோறும் நவீன கழிவறை வசதிகள் வந்தபிறகு இதுவரை இருந்து வந்த வேலைகளும் இல்லாமல் போனது.
இதையடுத்து, ஆடு, மாடுகள் வளர்ப்பதுடன், அன்றாட கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர்.
காசு பணமின்றி வறுமையுடன் பாழடைந்த வீடுகளில் வாழும் இவர்கள், எந்த அடிப்படை வசதியும் இன்றி அல்லல்பட்டு வருகின்றனர்.
இவர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து வகையான ஆவணங்களும் உள்ளன. கடந்த ஆண்டுவரை வீட்டு வரியும் செலுத்தி உள்ளனர்.
ஆனால், தாங்கள் என்னவோ இப்போதுதான் குடியேறியவர்கள் போல் பஞ்சாயத்து அலுவலகத்தில் வீட்டு வரி வாங்க மறுப்பதாகவும் தங்களை இந்த இடத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

