மேல்மலையனூர்: மேல்மலையனூர், ஏம்பலம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் மண்பாண்டத் தொழிலாளர்கள், வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி ெகாண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்காக மண்ணாலான அடுப்பு, பானை, சட்டிகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்குத் தேவையான ஒற்றை, இரட்டை அடுப்புகள் என இரண்டு வகைகளில் செய்கிறோம். ஒற்றை அடுப்பு ரூ.75க்கும், இரட்டை அடுப்பு ரூ.100க்கும் விற்பனை செய்ய உள்ளோம்.
அதேபோல் ரூ.25 முதல் ரூ.100 வரையில் மண்பானைகளை விற்க உள்ளோம். கடந்த காலங்களில் மண்பாண்ட பொருட்களுக்கு அதிக கிராக்கி இருந்ததால், எங்களுக்கு நல்ல வருமானமும் இருந்தது. இப்போது விற்பனை குறைந்து, வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. பானைகள் தயாரிக்க ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற்கு அரசு எங்களுக்கு அனுமதி அளித்திருந்தாலும், மண் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

