கோவை: விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை மக்கள் வெற்றிபெற வைத்தால், கோவையிலேயே தங்கி மாதந்தோறும் 10 நாட்களுக்கு மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்துதருவேன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கூறியுள்ளார்.
"கோவையில் அதிமுக வென்ற தற்கு பணம் ஒரு முக்கிய காரண மாக இருந்தாலும் நம்மிடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம்தான்," என்றார் அவர்.
கோவை மாவட்ட திமுக சார்பில் கொடிசியா மைதானத்தில் நடந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு இடங்களில் திமுக வெற்றி பெற்றாலும் கோவை மக்கள் ஏமாற்றி விட்டனர். கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பணத்தைக் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
"மீண்டும் கோவை மக்கள் எங்களை ஏமாற்றிவிடலாம் என்று கற்பனையில் கூட நினைக்கக் கூடாது. எந்த பொறுப்புக்கும் நான் ஒருநாளும் ஆசைப்பட்டது கிடையாது. தலைவருக்கும் உங்களுக்கும் ஒரு பாலமாக இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம்," என்று அவர் கூறியுள்ளார்.

