செங்கல்பட்டு: தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த பெண் சாமியார் அன்னபூரணியின் (படம்) அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு காவல்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
ஓமிக்ரான் பரவல் காரணமாக திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது என்று அன்னபூரணியின் அருள்வாக்கு நிகழ்ச்சி நடைபெற இருந்த திருமண மண்டப உரிமையாளரை எச்சரித்து உள்ளனர்.
பெண் சாமியார் ஒருவர் கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார்.
'அன்னபூரணி அம்மாள்' என்ற பெயரில் அழைக்கப்படும் பெண் சாமியார், பட்டுச்சேலை அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கி நடந்து செல்கிறார். தனது வலது கையை காட்டியபடியே பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருக்கும் பெண் சாமியாரின் காலில் விழுந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் வழிபடுகிறார்கள்.
சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் பங்கேற்றவர் அன்னபூரணி.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை இப்படி ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

